பல நாட்கள் தங்கியிருந்து ஹஜ் கடமையை செய்யும் பெண்கள் விடயத்தில் குர்ஆன் ஓதுவது பற்றி நபிகளார் தெளிவான சட்டத்தை கண்டிப்பாக குறிப்பிட்டிருக்க வேண்டும். இருந்தும் தவாப் மாத்திரம் கூடாது என்று உறுதியிட்டு கூறியிருப்பது அல்குர்ஆனை ஓத முடியும் என்பதையே சுட்டுகிறது.
மேற்குறிப்பிட்ட கருத்துக்களை நோக்கும் போது ஸஹாபாக்கள், தாபியீன்கள், இமாம்கள், நவீன கால அறிஞர்கள் என பலரும் பெண்கள் மாதவிடாய் காலத்தில் குர்ஆன் ஓதுவது கூடும் என்ற சிந்தனையை ஆதரித்தே கருத்து வெளியிட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. இதற்கு பிரதானமான காரணம் மாதவிடாய் காலத்தில் பெண்கள் குர்ஆனை ஓதுவதை விட்டும் தடுக்கக் கூடிய மிகச் சரியான தெளிவான நேரடியான எந்த சட்ட ஆதாரங்களும் ஷரீஆ சட்டப்பரப்பில் இல்லாமையாகும்.
அவ்வாறே ஸஹாபாக்களின் காலத்தில் மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் குர்ஆன் ஓதக் கூடாது என்பதற்கான எந்தப் பதிவுகளும் கிடையாது.
எனவேதான் அதிகமான அறிஞர்கள் பெண்கள் மாதவிடாய் காலத்தில் தொழுவது ஹராம் என்றும் குர்ஆன் ஓதுவது ஆகும் என்றும் தேவைப்படும் போது குர்ஆனை தொடுவதும் ஆகும் என்றும் அபிப்பிராயங்களை தெரிவித்துள்ளனர்.
மூன்றாவது சிந்தனை ஒரு ஆயத்திற்கு குறைந்த பகுதியை ஓதலாம் என்ற அபிப்பிராயமாகும். இது இமாம் அபூ ஹனீபாவின் கருத்தாகும். (பதாஇஉஸ் ஸனாஇஉ 1/38)
மேற்கூறிய சிந்தனைகளை அவதானிக்கும் போது மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் குர்ஆனை ஓதுவது குறித்து அறிஞர்கள் மத்தியில் வித்தியாசமான கருத்துக்கள் நிலவுகிறது என்பது தெளிவாகிறது. எனவே ஒருவர் தான் விரும்பிய ஒரு கருத்தை தெரிவு செய்யலாம். தான் தெரிவு செய்த சிந்தனைக்கு மாற்றமான கருத்தை கொண்டவருடன் விதண்டாவாதங்கள் செய்யத் தேவையில்லை. மாற்றமாக அடுத்த தரப்பின் கருத்துக்களை மதிக்கும் வகையில் நடந்து கொள்வதே பண்பாடாகும்.
இஸ்லாமிய ஷரீஆவின் கிளை அம்சங்களில் அனைவரையும் ஒரே கருத்தில் கொண்டு வரவேண்டும் என நினைப்பது இறை ஏற்பாட்டுக்கே முரணாகும். சட்டப்பகுதியின் கிளைப் பிரிவு என்பது ஒரு நந்தவனம். அங்கு வித்தியாசமான மலர்கள் இருப்பதுவே அழகு. அந்த அழகை கெடுப்பதற்கு யாரும் முயற்சிக்கக் கூடாது.
பாடசாலைகளிலும் அறபுக் கலாசாலைகளிலும் கல்வி பயிலும் மாணவிகளுக்கும், இஸ்லாமிய கற்கைகள் துறையில் உள்ள மாணவிகளுக்கும் பெண் ஹாபிழ்களுக்கும் அல்லது வேறு சூழ்நிலைகளில் உள்ள பெண்மணிகளுக்கும் மேலே கூறப்பட்ட இரண்டாவது சிந்தனையை தெரிவு செய்வதே மிகவும் பொருத்தமானது. இஸ்லாமிய வழிகாட்டல்கள் ஒருபோதும் மக்களை கஷ்டப்படுத்துவதில்லை. மார்க்கம் இலகுவானது. இலகுபடுத்துவதையே அது தூண்டுகிறது. இலகுவானதை தெரிவு செய்வதற்கே வழிகாட்டியுள்ளது.
அவ்வாறே புனித ரமழான் காலங்களில் மாதாந்த உபாதைக்குள்ளாகும் பெண்கள் குறிப்பிட் சில நாட்கள் குர்ஆன் ஓதாமல் இருப்பது நிச்சயமாக சங்கடமான ஒரு விடயமாகும். இத்தகைய சந்தர்ப்பங்களில் அறிஞர்களின் கருத்து வேறுபாடுகள் அருளாவே காணப்படுகிறது.
இங்கு வாசகர்கள் சில அடிப்படை உண்மைகளை புரிந்து கொள்ள வேண்டும். கருத்து வேறுபாடுள்ள விடயங்கள் நெகிழ்ந்து கொடுக்க முடியுமான விவகாரங்களாகும். அதில் விட்டுக் கொடுத்து சகிப்புத்தன்மையுடன் நடப்பதே பண்பாடாகும். மேலும் கருத்து வேறுபாடுள்ள விடயங்கள் தடுக்கப்பட வேண்டிய தீமையாகாது. சட்டப்பரப்பில் வித்தியாசமான கருத்துக் கொள்வதற்கு இடம்பாடு இருந்தால் மாற்றுக் கருத்துக் கொண்டோரை ஒருபோதும் மறுதளிக்க முடியாது.
குறித்த ஒரு மத்ஹபின் வட்டத்தில் மாத்திரம் வெறித்தனமாக பிடிவாதம் பிடிப்பது நிச்சயமாக சமூகத்தில் பேரழிவையே கொண்டுவரும். மார்க்கத்தின் கிளை அம்சங்களில் கருத்து முரண்பாடுகள் இருக்கவே செய்யும். அது இஸ்லாமிய சட்டப்பரப்பின் கிளை விவகாரங்களில் காணப்படும் இயல்பாகும்.
அனைவரும் ஒரு கருத்தில் இருக்க வேண்டும் என்று நிர்ப்பந்திப்பது நிச்சயமாக குழப்பங்கள் உருவாகுவதற்கே வித்திடும். அவ்வாறு செயற்படுவது இறை நியதிகளுக்கு முரண்பட்ட போக்காகும்.
இஸ்லாமிய சட்டப்பரப்பில் இத்தகைய கருத்து வேறுபாடுள்ள விடயங்களில் யாருடைய ஆதாரம் மனதிற்கு திருப்தி தரும் வகையில் உள்ளதோ அந்த வகையில் செயற்படுவதற்கு சுதந்திரம் உண்டு. காரணம் அது தனிமனித வழிபாடாகும். இது ரமாழான் நோன்பு அல்லது பெருநாள் தினத்தை நிர்ணயித்தல் போன்ற சமூகக் கடமைகள் அல்ல.
மேற்படி கருத்து வேறுபாடுள்ள சமூக கடமைகளை நிறைவேற்றும்போது தனிமனிதர்களோ பள்ளிவாயல்களோ ஊர்களோ அமைப்புக்களோ தனித்து தீர்மானம் எடுத்துத் தொழிற்படுவது சட்ட மரபுக்கு முரணாகும்.
ஆனால் பெண்கள் மாதவிடாய் காலத்தில் குர்ஆன் ஓதுவது சமூகக் கடமையன்று. அது தனிமனித வழிபாடாகும். எனவே இத்தகைய விவகாரங்களில் ஒருவர் தான் விரும்பிய சிந்தனையை சுதந்திரமாக தெரிவு செய்து பின்பற்றலாம். பொது மக்கள் இத்தகைய கருத்து வேறுபாடுகளில் உள்ள நன்மைகளை பெற முடியாமல் கதவடைப்பது தான் கூடாது. தகுதிவாய்ந்த ஒவ்வொரு அறிஞரின் கருத்திலும் சிந்தனையிலும் அருளும் நலனும் இருக்கவே செய்யும்.
அல்லாஹ் மிக அறிந்தவன்.