சட்டவாக்க முறைமையில் மகாசிதுஷ் ஷரீஆ மிக முதன்மையான பாடம். ஷரீஆவின் இலக்குகளை வகைப்படுத்தும் போது வாழ்க்கைக்கு இன்றியமையாதவையை குறிக்க’ழரூரிய்யா’ என்ற பதம் பயன்படுத்தப்படுகிறது. ‘அத்தியவசியமானவை’ எனலாம். மார்க்கம், உயிர், பரம்பரை, சொத்து, அறிவு ஆகிய ஐந்தையும் பாரம்பரிய இஸ்லாமிய அறிஞர்கள் ழரூரிய்யாத் இனுள் அடக்குகின்றனர். இவர்கள் சூழல் பாதுகாப்பை உள்ளடக்கவில்லை. எனினும் மேற்கூறிய ஐந்தும் சூழலுடன் தொடர்புபடுகின்றன என்பதை ஏற்பதுடன் தொடடர்புபடுத்தி விளக்கியும் வந்துள்ளனர். உதாரணமாக உயிரைப் பாதுகாத்தல் எனும்பகுதியில் வளி மண்டலம் மாசடைதல் தாக்கத்தை ஏற்படுத்துகிறது, மனிதனை மெதுவாக கொல்கிறது என்கின்றனர். மாற்றமாக, நவீன கால அறிஞர்கள் சூழல் பாதுகாப்பை மகாசிதுஷ் ஷரீஆவின் ழரூரிய்யாத் பகுதியில் ஐந்துடன் ஆறாவதாக உள்ளடக்க வேண்டும் எனவாதிடுகின்றனர். சூழலை மாசுறச் செய்வது மகாசிதுஷ் ஷரீஆவின் ழரூரிய்யாத் பகுதிகளையே கேள்விக்குறியாக்குகிறது என்பதும் அறிஞர்களது கருத்தாகும்.
சூழலும் அல்குரான், சுன்னா சார்ந்த கலைகளும்
அல்குரான் சார்ந்த உலூமுல் குரான் கலையில் சூராக்களது பெயர்கள் சார்ந்ததலைப் போன்றிருக்கிறது. அல்குரானது தலைப்புக்கள் விலங்குகள், தாவரங்கள், பிரபஞ்சப்பொருட்களுடன் தொடர்புடையதாகவே அமைக்கப்பட்டிருக்கின்றன. மாடு, கால்நடைகள், யானை, ஓடும் குதிரைகள், தேனி, எறும்பு, சிலந்தி, தீன் எனும் தாவரம், இரும்பு போன்ற சூழல்சார்ந்த தலைப்புக்களை கூறுவதுடன் சூறாக்களின் இடையிலும் சூழலியல் உரையாடல்கள் நிறைந்து காணப்படுகின்றன. சூழலில் மிக அற்பமாக கருதப்படும் ஈ பற்றியும் அல்குரான்பேசுகிறது. சூழல் நிகழ்வுகளான மழை, புயல், இடி, சூரிய ஒட்டம் என்பவற்றுடன் இரவு, பகல்மாறி மாறி வரல், அதிகாலை போன்ற விடயங்களையும் பேசுகிறது. இயற்கை காட்சிகளையும், உலக நடப்புகளையும் அல்குரான் பல இடங்களில் காட்சிப்படுத்துகின்றது.
ஹதீஸ் தொகுப்புக்களின் உள்ளடக்கங்களது தலைப்புகள் ஹதீஸ்களும் சூழலுடன் இறுக்கமான பிணைப்பை கொண்டிருந்தன என்பதற்கான ஆதாரமாய் அமைகின்றன. கிதாபுத்தஹாரா, கிதாபுல் முசாகாத், கிதாபுல் முஸாரஆ, கிதாபுல் அத் இமா, கிதாபுத் திப், கிதாபுல்அதப்… போன்ற தலைப்புகள் சூழல் பாதுகாப்பு தலைப்புடன் தொடர்புபடுகின்றன. நபியவர்களது வாழ்வு பற்றி பேசும் சீரா புத்தகங்கள் கூட நிகழ்வுகளை சூழல் பாதுகாப்புடன் இணைத்துப் பார்க்கின்றன. உதாரணமாக நபியவர்கள் சிறுவயதில் ஹலீமாவுடன் கிராமப்புறசூழலுக்கு அனுப்பப்ப்டல் கிராமப்புற வாழ்வின் தூய்மையான சூழலையும் அது குழந்தைகள் உள்ளத்திலும் மனோநிலையிலும் ஏற்படுத்தும் மாற்றத்தையும் கூறுவதாக உள்ளது எனஅறிஞர்கள் விளக்குவர்.